மஜீட். ARM
சம்மாந்துறை அலவக்கரை அண்டிய பிரதேசங்களில் பகல் வேளைகளில் வயல் வெளிகளில் நடமாடும் காட்டு யானைகள், இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன், வீடுகள் உள்ளிட்ட உடமைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதன் போது, காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்கும் நடவடிக்கையாக, பிரதேச சபையினால் பிரதேச மக்களின் உதவியுடன் பெறப்பட்ட பெரிய போக்கஸ் லைட்கள், யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பொருத்தமான இடங்களில் பொருத்தப்பட்டன.
மேலும், காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வனஜீவிகள் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.








