தலங்கம, அக்குரேகொட பகுதியில் வெள்ளிக்கிழமை (13) சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளிலுள்ள தரவுகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (18) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 12 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கொட்டாவை பகுதியில் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு சகோதரர்களும் நேற்று (17) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்று (17) பிற்பகல் பொல்கஸ்ஓவிட்ட பகுதியில் 'பொல்கஸ்ஓவிட்ட டிலா' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டிலா எனும் நபரின் ஆலோசனையின்பேரிலேயே குறித்த இரு இளைஞர்கள் துப்பாக்கிகளை விநியோகித்துள்ளமையும் அதற்கு டிலா என்பவர் ஒத்துழைத்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
