மத்திய மாலியில் டொகோன் இன மக்கள் வசிக்கும் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மாலியில் நீடித்து வரும் இனக் குழுக்களுக்கு இடையிலான வன்முறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் எந்தக் குழுவும் உடன் பொறுப்புக் கோரவில்லை. எனினும் டொகோ இனத்தினருக்கும் புலானி இனத்தினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த இரு கிராமங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் மேயர் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
“சுமார் 100 அடையாளம் காணப்படாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்து திடீரென கிராமத்தை ஆக்கிரமித்து அங்கு தீமூட்டியுள்ளனர்” என்று யோரோ மேயர் இசியாக்கா கனமே குறிப்பிட்டுள்ளார்.
பழிக்குப் பழி நடவடிக்கையாக டொகோன் வேட்டைக்காரர்கள் மற்றும் புலானி மேய்ச்சல்காரர்கள் இடையே சண்டை நீடித்து வருகிறது. கடந்த வாரம் டொகோன் கிராமம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

