தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக தரம் எட்டில் பரீட்சை ஒன்றை நடத்தி மாணவர்களின் திறமைகளுக்கேற்ப தெரிவு செய்த பாடத்துறையின் மூலம் மாணவர்களுக்கு உயர் கல்வியை கற்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
கல்விக் கொள்கையின் மூலம் பிள்ளைகள் சிறப்பாக பரீட்சைகளில் சித்தியடைவதைப்போன்று அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகுமென்றும் தெரிவித்தார்.
கடவத்த மஹா மாயா மகளிர் கல்லூரியில் நேற்று (05) நடைபெற்ற புதிய விளையாட்டரங்குடன் கூடிய இரண்டு மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டார். கல்லூரிக்கு சென்ற ஜனாதிபதியை பாடசாலை மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஜனாதிபதி புதிய இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். ஜனாதிபதியின் கோரிக்கையின் பேரில் பாடசாலை மாணவி ஒருவரினால் அதற்கான நினைவுப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்து புதிய கல்வித்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது, பிள்ளைகள் தமது திறமைகளுக்கேற்ப எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவாகும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக தரம் எட்டில் பரீட்சை ஒன்றை நடத்தி தமது திறமைகளுக்கேற்ப தெரிவு செய்த பாடத் துறையின் மூலம் பிள்ளைகளுக்கு உயர் கல்வியை கற்பதற்கு இந்த புதிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வாய்ப்பு கிடைப்பதுடன், பாடசாலைகளை வகைப்படுத்தி அப்பாடசாலைகளுக்கான விசேட பாடத் துறைகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நிகழ்வில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

