இன்றைய முஸ்லிம் சமூகத்தில் ஏராளமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை அரசியல் கட்சிகள் சமூக சேவை நிறுவனங்கள் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் இஸ்லாமிய வழிகாட்டல் மற்றும் சமூக வழிகாட்டல் நிறுவனங்கள் மார்க்க நிறுவனங்கள் இஸ்லாமிய தஃவா இயக்கங்கள் என பல்வேறானவை .முஸ்லிம்களிடம் சனத்தொகை வீதத்தை விட சமூக நிறுவனங்களின் வீதம் அதிகம் என ஒருமுறை பேராசிரியர் ஜயதேவ உயன்கொட நிரைவுகூர்ந்தமை பெரிய உண்மை.
இத்தனை நிறுவனங்கள் இருந்தும் எத்தனை பிரச்சினைகள் தீர்ந்தன? எத்தனை நெருக்கடிகளுக்கு தீர்வு காணப்பட்டன? எத்தனை சவால்களை நாம் கடந்து போயிருக்கிறோம்? என்று கேட்டால் விடை கவலைக்கிடமாவே உள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது நிறுவனங்களில் முன்னுரிமை பெறுவோர் யார் என்ற கேள்விக்கு அதீத நிறுவன விசுவாசி என்ற பதில்தான் கிடைக்கும். தகுதி தராதரம் கல்வி விஷயதானம் எல்லாம் இரண்டாம் பட்சம் .முதலில் அமைப்பு விசுவாசம் குருட்டு விசாவாசம். அது இருந்தால் யாரும் எந்த அமைப்பிலும் அவசரமாக மேலே வரலாம்.
இரண்டாவது தனது இடத்தை தக்க வைக்க எண்ணுபவர் கொஞ்சம் படம் காட்டவும் தெரிந்திருக்க வேண்டும். வாயால் வடை சுட்டால் எவரெஸ்டை எட்டலாம். மூன்றாவது கிரெடிட் மேனியா என்ற மனநோய் பல நிறுவனங்களைப் பாதித்துள்ளது. எல்லாவற்றையும் நாம் செய்வோம் எல்லாவற்றுக்குமான credit எங்களுக்கே வேண்டும். இந்த மனோநிலை மிகவும் கீழ்த்தரமானது. முஸ்லிம் சமூக நிறுவனங்கள் பல ஒரே வகையான பணித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு (duplicated projects ) இதுவே பிரதான காரணம்.
மூன்றாவது செயலூக்கத்தை விட அளவுக்கதிகமான பேச்சும் கதையும் உரையாடலும் சமூக நிறுவனங்களைப்பெரிதும் விழுங்கியுள்ளது. இதனால் கலந்துரையாடல்கள் ஏராளம் .அமுலாக்கம் சிலவேளை பூச்சியமாக கூட இருக்கிறது. ஒன்றும் நடந்தபாடில்லை. கூடிக்கூடிக்கலைதல் மட்டுமே எங்கள் நிறுவனங்களுக்கு கை வந்த கலை. ஒருவர் 100 கி.மீட்டர் தொலைவிலிருந்து ஒரு கலந்துரையாடலுக்கு வருகிறார் அப்படி ஐந்து பேர் வந்தால் செலவாகும் மனித மணித்தியாலங்கள் எரிபொருள் பணம் உடற்களைப்பு இவற்றுக்கெல்லாம் என்ன பெறுமதி?
நிறுவனங்களிடம் கூட்ட முகாமை meeting management இல்லாததால் சில நிறுவனங்களின் செயலூக்கம் விளைதிறனற்றவையாக மாறியுள்ளன. திட்டமிடல் என்றாலே long-term strategy என்று பெரிய அளவில் தான் கதை நகரும். நிறுவனங்களின் அன்றாட மையப்பிரச்சினைகளுக்கு தீர்வு இருக்காது. அதபோல் நிறுவனங்களிடம் strategic priorities உம் இருக்காது. எது முதலில் என்பது தனிநபருக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் உண்டு .முழு மொத்த சமூகத்திற்கும் உண்டு. துரதிஷ்டமாக area of priority பல நிறுவனங்களுக்கு ஒரு gray zone தான்.
மாற்று அபிப்பிராயம். மாற்றுக் கருத்து .மாற்று நிலைப்பாடு இவை எல்லாம் நிறுவனங்களுக்கு ஒவ்வாமை. அதனால் அத்தகைய நபர்களை அவை உள்வாங்கத்தயங்குகின்றன. தம்மை வெளியாட்கள் எப்படிப்பார்க்கிறார்கள் என்பதை ஏற்க மறுக்கும் "நிறுவன உளவியல் தான்" பின்னடைவுக்கு பங்களிக்கும் முதல் காரணி.இதனால் நிறுவனங்களின் கதை கந்தலாகிறது. முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகின்றது. இப்போதெல்லாம் நான் அழைக்கப்படும் அத்தனை கூட்டங்களுக்கும் செல்வதில்லை.
ஒன்று மட்டும் உண்மை; நிறுவனப் பெருக்கம் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. ஆனால் அடையப்பெற்றது ஒன்றுமில்லை என்றாகிறது. சுய விமர்சனம் இல்லாத தனிமனிதனும் சுய மதிப்பீடு இல்லாத சமூக நிறுவனங்களும் மாற்றத்தை நோக்கி நகர்தல் சாத்தியமே இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு.சொல்லப்போனால் பொல்லாப்பு சொறியப்போனால் அரையாப்பு என்று. இங்கும் இதை வாசிக்கும் யாருக்கும் அப்படி நிகழாதிருக்கக் கடவது
கலாநிதி றவூப் ஸெய்ன்