*சமூக அபிவிருத்தியில் சமூகப் பணியின் வகிபங்கு*

0


சமூக அபிவிருத்தி எனப்படுவது ஒரு சமூகத்தில் தனி நபர்களின் வாழ்க்கைத் தரம், மக்களின் நல்வாழ்வு மற்றும் ஒட்டுமொத்த நலன்புரியை மேம்படுத்துவதற்கான ஒரு செயன்முறையாகும் .இது சமூக நீதி,சமூக சமத்துவம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதனூடாக மனித வாழ்க்கையை மேம்படுத்தும் செயன்முறையாகும். மேலும் சமூகப் பிரச்சினைகளை அடையாளம்  கண்டு, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து மக்களுக்கு அதற்கான வசதிப்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுப்பது சமூகப்பணி எனப்படும்.இப்பணிச் செயன்முறையினையினை மேற்கொள்பவர்களே சமூகப்பணியாளர்கள் ஆவார்கள். அந்த வகையில் சமூக அபிவிருத்தியில் சமூகப் பணியின் அவசியம் மற்றும் சமூகப் பணியாளர்களின் செயற்பாடுகள் என்பவற்றை இக்கட்டுரை ஆராய்கின்றது.


ஒரு நாட்டின் அபிவிருத்தி வெறுமனே பௌதீக வளங்களின் அபிவிருத்தியில் மாத்திரம் இடம்பெற முடியாது. மாறாக அபிவிருத்தியானது பூரணப்படுத்தப்பட வேண்டுமானால் ஒப்பீட்டடிப்படையில் மனித வளங்களின் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும் .இவ்வாறான பௌதீக வளம் மற்றும் மனித வளம் உட்பட சமூக அபிவிருத்தியை கொண்டே ஒரு நாட்டின் அபிவிருத்தியை அளவிட முடியும். அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு எந்தளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதன் பூரண பயனை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் அபிவிருத்தி என்பது மக்களின் உண்மையான தேவையாக மாற வேண்டும் .மேலும் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் மீது அதன் பயனாளர்களின் மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கை ஏற்பட வேண்டும். இதன் மூலம் அபிவிருத்தியின்  பிரதிபலன்களை மக்களுக்குச் சென்றடையச் செய்து நாட்டின் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் இன்றைய உலகில் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் சமூக பணியின் பங்களிப்பு மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கும் போது அவற்றின் அபிவிருத்தியில் சமூகப் பணியின் பங்கு முக்கிய இடம் பிடித்திருப்பதை கண்டு கொள்ளக் கூடியதாகவுள்ளது. எமது நாட்டைப் பொருத்தவரையில் சமூகப் பணியின் அவசியம் அதிகரித்துச் செல்வதை உணரக்கூடியதாக  உள்ளது.



குறிப்பாக, எமது நாட்டில் சுமார் 03 தசாப்த காலமாக இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட இடம்பெயர்வு அகதி முகாம் வாழ்க்கை, அங்கவீனம், சொத்தழிவுகள் மற்றும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் போன்ற விடயங்கள் காரணமாக மக்கள் மத்தியில்  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் சமூக மட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று யுத்தத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையில் வேறு வகையிலான புதிய பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. இன நல்லணக்கம் மூவின மக்கள் மத்தியில் நட்புறவை ஏற்படுத்துவதற்கு மாறாக இனவாதம், மதவாதம் போன்றன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


மாறிவரும் உலகில் நவீன தொழினுட்பத்தின் 

முறையற்ற பயன்பாட்டினால் இளவயதினர் மத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல், தற்கொலை, போதைப் பொருள் பாவனை அதிகரித்தல், அதிகரித்து வரும் வயோதிபர்களின் சனத்தொகை, சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு

எதிரான வன்முறைகளின் அதிகரிப்பு, உறவு முறைகளின் விரிசல் மற்றும் தலைமுறை இடைவெளியை சரியாகப் புரிந்து கொள்ளாததன் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் எனப் பல பிரச்சினைகளை எமது சமூகம் பிரச்சினைகளாக அடையாளப்படுத்துகிறது.


இவ்வாறான சமூகப் பிரச்சினைகளை நேரடி சமூகப் பணி முறைகளான தனிநபர் ரீதியாகவும் (case work), குழுக்கள் ரீதியாகவும் [Group work], சமூக ரீதியாகவும்,கொள்கை ரீதியாகவும் [community work] மற்றும் மறைமுக சமூக பணி முறைகளான சமூக நல நிர்வாகம்   [social welfare Administration] சமூக ஆராய்ச்சி( social Researsh ), சமூக நடவடிக்கை (social action) போன்ற இடையீடுகளைப் பயன்படுத்தி  தீர்வுகளை வழங்குவதே சமூகப் பணியாகும் . இந்த சமூகப்பணியானது முறைப்படுத்தப்பட்ட கல்வி முறையில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான கற்கை நிலையங்களில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இக் கற்கையானது Deploma, BSW, MSW, MPhil, PHDE பட்டங்கள் வரை ஒழுங்கமைக்கப்பட்டு காணப்படுகின்றது.

குறிப்பாக சமூகப்பணி கற்கைகளானது இலங்கையில் பேராதனை , ஜயபுர பல்கலைக் கழகங்களிலும் மற்றும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்திலும் கற்பிக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இக்கற்கை நிலையங்கள்  சமூகப்பணியை மேற்கொள்ளக் கூடிய தொழில்வாண்மை தகைமை கொண்ட சமூகப் பணியாளர்களை உருவாக்குவதற்கும், அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்குமான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றதோடு, சமூகப் பணியாளர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளக்கூடிய சூழலை அமைத்து கொடுப்பதன் மூலம் ஒரு சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளைக் காண்பதற்கான வசதிப்படுத்தல்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றமையால் சமூகப் பணியானது சமூக அபிவிருத்திக்கு அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது.


இவ்வாறே, சமூக அபிவிருத்தியில்  சமூகப் பணியாளர்கள் பல செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். அந்தவகையில் சமூகப் பணியாளர்கள் சமூக ஆய்வு மற்றும் திட்டமிடல் செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள் *உதாரணமாக;* ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இள வயதுத் திருமணம் அதிகமாக இருப்பதை கண்டறிந்தால் அதற்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து அக்கிராமத்தில் உள்ள பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு, கல்வி நிலை, பொருளாதார நிலை, சமூக நம்பிக்கைகள் போன்றவற்றை ஆராய்ந்து அதற்கேற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ,கல்வித் திட்டங்கள் ,குழுக்கள் மூலம் ஆலோசனை வழங்கல் போன்ற திட்டங்களை வழங்கி சமூக பணியாளர்கள் என்ற வகையில்  அதற்கான வசதிப்படுத்தலை  ஏற்படுத்துகிறார்கள்.


அதே போன்று, சமூகத்தில் உள்ளவர்களை சுய தொழில் முயற்சிகளில்  ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை சமூக பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். *உதாரணமாக;* ஒரு கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தையல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில் பயிற்சிகள் வழங்கி அவர்கள் தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுவதன் மூலம் சமூக வளர்ச்சிக்கு பங்களித்தல். மேலும் சமூக நலன்களில் கவனம் செலுத்துவதன் மூலம் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச் செயல்களை இல்லாதொழிக்க கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். *உதாரணமாக ;* பெண்களுக்கு

எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிகள், மனோ தத்துவ ஆலோசனைகள் போன்றவற்றை வழங்குதல் .

 அத்தோடு பாலியல் தொல்லைகள், இளவயதுத் திருமணம் போன்ற பிரச்சனைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்கள்.


மேலும், சமூகப்பணியாளர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில்  கவனம் செலுத்தி சமூக அபிவிருத்திக்கு பங்களிக்கிறார்கள். அதாவது இதன் மூலம் சமூகத்தில் சுற்றுச் சூழல் குறைபாடுகளை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். குறிப்பாக, பசுமைத் திட்டங்கள்(zero plastic) ,சுற்று சூழல் விழிப்புணர்வு, நதி மற்றும் காடுகள் பாதுகாப்பு போன்றன இதற்கு எடுத்துக் காட்டாகும். அதே போன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சுகாதாரம், ஊட்டச்சத்து போன்றவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய்களை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவித்தலை மேற்கொள்வதன் மூலம் சமூக விருத்திக்கு வழியை ஏற்படுத்துகிறார்கள்.


அத்தோடு பின்தங்கிய பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அத்தியவசிய உதவிகளை வழங்கி சமூக அபிவிருத்திக்கு வழிவகுப்பதோடு அதாவது, வறிய மக்களுக்கான சமூக உதவித் திட்டங்கள் நிதி உதவிகள், உணவு  மற்றும் உடை,மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக உதவித் திட்டங்கள்,விதவைப் பெண்களுக்கான கொடுப்பனவு மற்றும் பயிற்சி நெறிகள் போன்றவற்றை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றனர். *உதாரணமாக;* நீதிமன்ற உதவிகள், குடும்ப நலத் திட்டங்கள் மூலம் ஏழை மற்றும் வறிய குடும்பங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. மேலும், நகர்ப்புற பகுதிகளின் விருத்திக்கும் சமூகப் பணியாளர்கள் சமூகப்பணி செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். *உதாரணமாக;* நகர்ப்புற பகுதிகளில்  மீள் சுழற்சிக்கு உட்படாத கழிவுப் பொருட்களின் அதிகரிப்பு தொடர்பான பிரச்சினை இருந்தால் அக்கழிவுக் குப்பைகளை பிரித்தல், மீள் சுழற்சிக்கு உட்படுத்தல், கழிவுகளைக் கொட்டும் இடங்களை சுத்தம் செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நகர்ப்புற விருத்திக்கு பங்களிக்கிறார்கள்.


எனவேதான், சமூகப்பணியானது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இது ஒரு தனி நபரின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது.சமூகப் பணியாளர்கள் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமூகப்பணி என்பது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். சமூகத்தில் புதிய பிரச்சினை எழும் போதெல்லாம் சமூகப் பணியாளர்கள் தங்களை வடிவமைத்துக் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தி சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பதோடு சமூக நீதி, சமத்துவம் என்பவற்றை சமூகத்தில் நிலை நாட்டுவதற்கு ஒவ்வொரு சமூகப் பணியாளர்களும் தொழில்வாண்மை சமூகப்பணியாளர் என்ற வகையில் துணை நிற்க வேண்டும்.



AF. சஹ்னாஸ் பேகம்.

    -சம்மாந்துறை-

சமூகப் பணி இளங் கலைமானி சிறப்பு பட்டப்படிப்பு,

முதலாம் வருட மாணவி.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்- சீதுவை.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top