மஜீட். ARM
பிரதி பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் பணிப்புரைக்கு இணங்க, அம்பாறை கொண்டுவட்டுவான குளத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகனச் சோதனையின் போது, சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டு பிரதி பொலிஸ்மா அதிபருடன் விவாதத்தில் ஈடுபட்ட டிப்பர் வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் ஆவணங்களைச் பரிசோதித்து துண்டுச்சீட்டு (தண்டப்பணம்) வழங்க முற்பட்ட வேளையில், சாரதி வாகனத்திலிருந்து இறங்கி எதிர்ப்பு வெளிப்படுத்தியதுடன் அதிகாரிகளுக்கும் திட்டியுள்ளார்.
அவ்விடத்திற்கு வந்த பிரதி பொலிஸ்மா அதிபர், "பொலிஸாருடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்" எனக்கூறி சமாதானப்படுத்த முயன்ற போதிலும், சாரதி பிரதி பொலிஸ்மா அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் சாரதி கைது செய்யப்பட்டு, அம்பாறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, சாரதி 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளமை வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல்கள் தொடர்பான 4 வழக்குகளும், மேலும் ஒரு தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு வழக்கும் உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அம்பாறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் சந்தேகநபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
