அம்பாறை, இங்கினியகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்கந்த பகுதியில் பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடொன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (31) மாலை பெய்த கனமழையின் போதே இந்த துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
சம்பவத்தின்போது, வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்றிருந்ததுடன், அவர்களது தந்தை கொழும்புக்கும் தாய் அருகிலுள்ள தையல் நிலையம் ஒன்றுக்கும் பணிக்காக சென்றிருந்தார் என்றும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மின்னல் தாக்கத்தினால் வீட்டுக்குள் தீ பரவியதையடுத்து, உடனடியாக விழித்துக்கொண்ட பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் உபகரணங்களும் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
