உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகத் திறப்பதே "ஒரே தீர்வு" என அமெரிக்க எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் உயர்மட்ட அமைப்பான அமெரிக்க பெட்ரோலிய நிறுவனம் (API) தெரிவித்துள்ளது.
அமெரிக்க பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மைக் சோம்மர்ஸ் (Mike Sommers), இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் "இந்த வாரத்திற்குள் இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும். காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் எரிபொருள் விலை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்லும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் போருக்குள் நுழைந்துள்ளமை குறித்து மைக் சோம்மர்ஸ் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
மேலும் "ஹூதிகள் செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தால், அது ஒட்டுமொத்த உலகையும் ஒரு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடிக்குள் (Major Energy Crisis) தள்ளிவிடும். இதுவே இந்த வாரத்தின் மிக முக்கிய கவலையாக உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பகுதியைத் தீர்மானிக்கும் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

