சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.
அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது தெய்வ நிந்தனை இடம்பெற்றாலோ, அதனை மாத்திரம் ஐசிசிபிஆர் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கைது செய்வதற்கான காரணமாகக் கருதக்கூடாது என அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

