யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்கு மரக்குற்றிகளைச் சாவகச்சேரி காவற்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாரவூர்திச் சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
:
வன்னிப் பகுதியிலிருந்து பாரவூர்தி ஒன்றின் மூலம் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தி வரப்படுவதாகச் சாவகச்சேரி காவற்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இந்த மரங்கள் மீசாலைப் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் இறக்கப்படவிருந்த நிலையிலேயே காவற்துறையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர், குறித்த பாரவூர்தியைச் சோதனையிட்டபோது, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 52 தேக்கு மரக்குற்றிகளைக் கண்டெடுத்தனர். மீட்கப்பட்ட மரக்குற்றிகளின் சந்தைப் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்த காவற்துறையினர், அவரையும் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் வாகனத்தையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரி காவற்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




