S.M.Z.சித்தீக்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய மனித உரிமைகள் அதிகாரியாக பி எம் எம் பெரோஸ் சட்டமானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரச சேவையில் உள்ள மனித உரிமைகள் தகமையைக் கொண்ட அரச உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உள்ளீர்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அண்மையில் இடம் பெற்றன. இத்தேர்வில்
சிறப்பு தேர்ச்சி அடைந்தவர்களின் முன்னிலை அடிப்படையில் இந்நிய மனங்கள் வழங்கப்பட்டுள்ளன .
இறக்காமம் அஷ்ரப் மகாவித்தியாலய பழைய மாணவரான இவர், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா மற்றும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைமானி பட்டங்களையும், ஐக்கிய ராஜ்யத்தின் பேர்மிங்கம்சேயர் நவீன பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இரண்டாம் தரத்தில் சிறப்பு தேர்ச்சி பட்டத்தினையும் பெற்றிருப்பதுடன் அதே பல்கலைக்கழகத்தில் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துறையில் சட்ட முதுமாணிக் கற்கையினையும் மேற்கொண்டு வருகின்றார்.
மேலும் இந்திய காமராஜர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் முதுமாணிக் கற்கையினையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் அபிவிருத்தி துறையில் டிப்ளமோ வினையும் நிறைவு செய்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தின் போது ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஆணைக்குழுவின் இடம்பெயர்ந்தவர்களுக்கான விஷேட திட்டத்தின் கீழ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய நிகழ்ச்சி திட்ட அதிகாரியாகவும் மன்னார் மாவட்ட பிராந்திய நிகழ்ச்சி திட்ட அதிகாரியாகவும் இவர் கடமையாற்றி உள்ளார் என்பது விசேட அம்சமாகும்.
இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றியுள்ள இவர் கடந்த 12 வருடங்களாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகம், மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மற்றும் அம்பாறை மாவட்ட செயலகங்களில் வினைத்திறனான சேவையினை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உலக உணவு திட்டத்தின் அம்பாறை மாவட்ட செயலக இணைப்பு அதிகாரியாக செயற்பட்ட இவர் அத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்து பாராட்டு பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மனித உரிமைகள் மேம்பாடு, சமூகநீதி, சமூக சேவைகள், மத நல்லிணக்கம் போன்றவற்றுக்கான இவரது அர்ப்பணிப்புக்களை பாராட்டி 2018ம் ஆண்டில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கான மனித உரிமைகள் பேரவையினால் இவர் தேச கீர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை சட்டக் கல்லூரியின் இறுதி வருடத்திலும் கற்றுக் கொண்டிருக்கும் இவரது திறமைகளும் இவருக்குள்ள நான்கு மொழி தேர்ச்சியும்
நிச்சயம் அம்பாறை கல்முனை பிராந்திய மக்களுக்கு பயனளிக்கும் என்பது திண்ணமாகும்.