உலக ஊடக சுதந்திர தினம் இன்று

Dsa
0

 



உலக ஊடக சுதந்திர தினம் ( World Press Freedom Day ) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் " மனித உரிமைகள் சாசனம் " பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டுவதற்காகவும் மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திர தினமாக ஐக்கிய நாடுகளால் 1993 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது . இன்று 26 ஆவது உலக ஊடக சுதந்திரத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது .



பயமோ பக்கச்சார்பில்லாத இதழியல் எனும் தொனிப்பொருளில் 2020 ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகின்றது . இதேவேளை , சுதந்திரமானதும் பல்தன்மையானதுமான ஊடகத்துறையை ஊக்குவித்தல் எனும் தொனிப்பொருளில் யுனெஸ்கோ கருத்தரங்கு ஒன்று கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 முதல் மே 3 ஆம் திகதிவரை நமீபியாவின் வைன்ட்ஹோக் நகரில் நடைபெற்றது . இக்கருங்கில் ஆபிரிக்க ஊடகவியலாளர்களால் பத்திரிகை சுதந்திரத்துக்காக பிரகடமொன்று தயாரிக்கப்பட்டது .



வைன்ட்ஹோக் பிரகடனம் ( Windhoek Declaration ) எனும் இப்பிரகடனம் 1991 ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்விலும் அங்கீகரிக்கப்பட்டது . பின்னர் , 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டத் தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் திகதி ஊடக சுதந்திர தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது . பத்திரிகை சுதந்திர நாள் எனவும் இது குறிப்பிடப்படுகிறது .



ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு ஆண்டுதோறும் யுனெஸ்கோ நிறுவனத்தினர் யுனெஸ்கோ ஃ கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது வழங்கி கௌரவிக்கின்றனர் . இவ் விருது கொலம்பியப் பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாஸாவின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது . இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் திகதி தனது அலுவலகம் முன்பாக வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் . கிலெர்மோ கானோ இசாஸாவின் நினைவாக , உலக அமைதிக்காகவும் , பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிகை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைக் கடந்து போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டொலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது .



யுனெஸ்கோ அமைப்பானது . வருடாந்தம் ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு , ஊடகவியலாளர்கள் , ஊடகச் சுதந்திர அமைப்புகள் மற்றும் ஐ.நா. முகவரகங்கள் பங்குபற்றும் மாநாட்டை ஒவ்வொரு தொனிப்பொருளில் நடத்துகிறது . 2006 ஆம் ஆண்டு இம் மாநாடு இலங்கையில் நடைபெற்றது . இவ்வருட மாநாடு நெதர்லாந்தின் நகரான ஹெய்க்கில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதிக வரை நடைபெறுகிறது . பயமோ பக்கச்சார்பில்லாத இதழியல் எனும் தொனிப்பொருளில் 2020 ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர தினம் முன்னெடுக்கப்படுகின்றது .



ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியா குட்டரெஸ் உலக ஊடக சுத்திரம் குறித்து தெரிவிக்கையில் , கொரோனா எனப்படும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவும் வேளையில் , பிழையான தகவல்களை வழங்கும் போது அது மற்றுமொரு தொற்றையும் பரவச்செய்கின்றது . சுகாதார கோட்பாடுகளை வழங்கி இவ்வாறான சதி கோட்பாடுகளுக்கு ஊடகங்கள் மருந்துகளை வழங்கும் முகமாக பிழையற்ற , உண்மைத்தன்மையான , அறிவியல் சார்ந்து பகுப்பாய்வுசெய்யப்பட்ட செய்திகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் . இதேவேளை , 2020 ஆம் ஆண்டு உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் 180 நாடுகளில் இலங்கை 127 ஆவது இடம்பிடித்துள்ளது .



எனினும் கடந்த ஆண்டை விட ஒரு இடம் பின்தள்ளப்பட்டிருக்கிறது . அத்தோடு கடந்த ஆண்டை விட 2.33 மதிப்பெண்களை அதிகமாகப் பெற்று 41.94 உலகளாவிய மதிப்பெண்ணை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது . 2013 ஆம் ஆண்டு முதல் உலக ஊடக சுதந்திர குறிகாட்டியில் இலங்கை பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேறி வந்திருக்கிறது .



அதற்கமைய இலங்கை 2013 ஆம் ஆண்டு 162 ஆவது இடத்தையும் , 2014 ஆம் ஆண்டு 165 ஆவது இடத்தையும் , 2015 ஆம் ஆண்டும் அதே இடத்தையும் , 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு 141 ஆவது இடத்தையும் , 2018 ஆம் ஆண்டு 131 ஆவது இடத்தையும் கடந்த ஆண்டு 126 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது . இந்த உலக ஊடக குறிகாட்டியில் முதல் மூன்று இடங்களை முறையே நோர்வே , பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் பெற்றுக் கொண்டுள்ளன . அதேபோன்று எரித்திரியா , துர்க்மெனிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் முறையே 178 , 179 மற்றும் 180 என்ற இறுதி மூன்று இடங்களை பிடித்துக் கொண்டுள்ளன .


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top