B.H.அப்துல் ஹமீத்
அவர்களின் அனுபவ வாசனை
நன்றியுள்ள நாய்க்கு-ஒரு சிலை…
உள்ளத்தை நெகிழவைக்கும் கதை…
டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Eizaburo Ueno 1920 களின் முற்பகுதியில் ‘ஹச்சி்கோ’ எனும் நாயை தன் செல்லப் பிராணியாக வளர்க்க ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் பேராசிரியர் தனது செல்லப் பிராணியை அழைத்துச் சென்று ‘ஷிபுயா’ ரயில் நிலைய முன்றலில் விட்டுவிட்டு அவர் பணியாற்றும் இம்பீரியல் பல்கலைக்கழகத்திற்கு, ரயிலில் செல்வார். ஹச்சிகோவும் தனது மாஸ்டர் வரும் வரை அங்கேயே காத்திருக்கும். பேராசிரியர் பணி முடிந்து மாலை மூன்று மணிக்குத் திரும்பி வந்து மீண்டும் ஹச்சிகோவை அழைத்துக் கொண்டு வீடுவருவார். இருவரும் இணைபிரியாத தோழமையுடன் வாழ்ந்து வந்த காலத்திலே, விதி விளையாடி பேராசிரியரின் உயிரைப் பறித்தது. 1925ம் ஆண்டு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில் மாரடைப்பு வந்து பேராசிரியர் இறந்து போகிறார். அவர் இறந்ததை அறியாத ஹச்சிகோ, ஒரு நாள் அல்ல இரு நாளல்ல 10 ஆண்டுகளாக தனது எஜமானனுக்காக அந்த இடத்தில் காத்திருந்து காத்திருந்து, கடைசியில் அந்த ஏக்கத்தோடு உயிர் நீத்ததாம். இறந்த அந்த உடலை பேராசிரியரை அடக்கம் செய்த இடத்துக்குப் பக்கத்திலேயே புதைத்ததோடு, நன்றியுள்ள அந்த நாய், எங்கே தன் எஜமானுக்காக 10 ஆண்டுகளாக காத்திருந்ததோ! அந்த இடத்திலேயே அதனது உருவச்சிலையையும் நிறுவியுள்ளார்கள்.
இன்று-Japan Tokyoவின் ‘ஷிபுயா’நகரில், பல நூற்றுக்கணக்கில் மக்கள் சந்தித்துக் கொள்ளும் அடையாளச் சின்னம் கொண்ட இடமாகப் புகழ் பெற்று விளங்குகிறது.
