(றியாத் ஏ. மஜீத்)
நாட்டிலிருந்து முற்றாக போதைப் பொருள் கருவறுக்கப்படும். எதிர்காலத்தில் நாட்டின் எந்த இளைஞனும் போதைப் பொருளுக்கு அடிமையாகமல் இருக்க சட்டங்கள் இறுக்கமாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான சந்திப்பின் போது தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையினை இல்லாமலாக்கி கிழக்கு மக்களை இயல்வு வாழ்க்கைக்கு திருப்பும் முகமாக ஜனாதிபதி இளைஞர்;களின் கருத்தறியும் மற்றும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் சம்பந்தமாக படையினருக்கு தகவல் வழங்கியமைக்காக சாய்ந்தமருது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (08) புதன்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டில் இனிவரும் காலங்களில் போதைப் பொருளுக்கு இடமில்லை. இதனை தொடர்;ச்சியாக முன்னெடுத்து செல்லவுள்ளேன். இதில் தொடர்புள்ள உள்ளுர் மற்றும் சர்வதேச நபர்கள் யாராகவிருந்தாலும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர்.
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் சர்வதேச நபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இந்த பயங்கரவாத குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு மிடையில் தொடர்புகள் உள்ளனவா என சந்தேகிக்க வேண்டியுள்ளது. இது விடயமாக பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். போதையற்ற நாடாக இலங்கை திருநாட்டை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இளைஞர்களுக்கு ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.





