புர்கா, நிகாப் என்பவற்றையும் இந்த நாட்டில் காணப்படும் மத்ரஸாக்களையும் தடை செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஆலோசனை செய்யத் தேவையில்லையென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று பொதுபல சேனா காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது எமது நாடு என்ற உண்மையை விளங்கி தைரியமாக கூறுவதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் தேரர் விமர்சித்துள்ளார்.
அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் சென்றுள்ளனர். தமக்குத் தெரியாத விடயங்களைக் கூறிக் கொண்டு திரியாது ஒரு ஓரமாக இருக்குமாறு இந்த நாட்டிலுள்ள தேரர்களுக்கும், ஏனைய குழுக்களுக்கும் சொல்கின்றோம்.
நாம் இதனை நிறைவுக்கு கொண்டு வருவோம் எனவும் ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளார்.

