
கலீபா உமர் இப்னு கத்தாப் (றழி) கம்பீரமாக அந்த சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் நுழையும் போதே
அதன் ஆட்சியாளர் உமரின் காலடியில் சரணடைந்து பைத்துல் மக்திஸின் சாவிக்கோர்வையினை கையளித்து விடுகிறார்.
அன்று யுத்தமின்றி ரத்தமின்றி பைத்துல் மக்திஸை உமர் கைப்பற்றினார்.
கலீபா உமரின் காலத்தில்தான் இஸ்லாம் அரேபியத்தீபகற்பத்தையும் தாண்டி உலகின் நாலாபுறங்களிலும் பரவியது.
உமரை அல்லது அபூஜஹ்லை இஸ்லாத்திற்கு தந்துவிடு இறைவா என்று நபி ( ஸல்) அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் உமர் வாளை உருவிக்கொண்டு நபியை கொல்லப்போவதாக ஒரு பொழுதில் வெளிக்கிட்டுப்போனார்!
போனவர் ரசூல் (ஸல்) அவர்களின் திருவதனத்தை கண்டதும் தீனுல் இஸ்லாத்தில் இணைந்துகொண்டார்.
நபியின் பிரார்த்தனை பலித்தது.
இவ்வாறான ஒரு மாபெரும் வீரர் இஸ்லாத்தில் இணைந்தால் அது மார்க்கத்தின் வளர்ச்சிக்கு பெரும்பலமாக அமையுமென்று நபி நம்பினார்.
அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
உமர் பைத்துல்லாவின் சாவிக்கோர்வையினை சத்தமின்றி கைப்பற்றியது அதற்கு சான்றானது!
இவ்வாறான ஒரு மாபெரும் வீரரை,
தனக்கு பின்னால் நபி ஒருவர் வருவதாக இருந்தால் அது உமராகத்தான் இருக்கவேண்டுமென்று நபியவர்கள் நன்மாராயம் சொன்ன மாமனிதரை.....
இவர் ஒரு வழியால் சென்றால் மறுவழியால் ஷைத்தான் மறுகிச்செல்லும் மாண்புமிக்கவராய் வாழ்ந்தவரை.....
மதீனாவின் அதிகாலைப்பொழுதொன்றில் ஒரு இலீஜ் முதுகில் குத்தினான்!
அப்போது கலீபா உமர் மஸ்ஜிதுன் நபவியில் இமாமாக சுபஹ் தொழுகையினை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்!
ரத்தம் சொட்ட சரிந்த உமரை கண்ணுற்ற மற்றொரு ஸஹாபாத்தோழர் முன்னகர்ந்து இமாமாக தொழுகையை தொடர்ந்தார்.
இந்த நிலையில் கூட யாரும் இறைவணக்கத்தை இடையில் விட்டு ஓடவில்லை!
முஸ்லிம் என்ற காரணத்திற்காக முதுகில் குத்தப்படுவது இன்று நேற்று தொடங்கிய கதையல்ல!
தொழுகையில்தான் உமரை போன்ற ஒரு மாபெரும் வீரனை சரிக்க முடியும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு எளியவன் உலகத்திற்கு சொல்லிக்கொடுத்தான்.
தொழுகையில் நாங்கள் இறைவனை தரிசித்துக்கொண்டிருக்கிறோம்...
தொழுகையில் நாங்கள் இறைவனோடு பேசிக்கொண்டிருக்கிறோம்....
தொழுகையில் நாங்கள் இறைவனையே நினைத்துக்கொண்டிருக்கிறோம்....
இந்த அதி உன்னதமான நிலையில் உயிர் பிரிவதை பெரும் பேறாக கருதுகின்றோம்.
அது மாபெரும் வீரர் உமருக்கு கிடைத்த பாக்கியம்.
யுத்த களத்தில் உயிர் துறக்கும் வீரத்தியாகிகளுக்கு (ஷஹீதுகளுக்கு) இறைவன் வழங்குகிற கெளரவமும், அந்தஸ்தும் ‘முஸ்லிம்’ என்கிற ஒரே காரணத்திற்காக கொல்லப்படுகிறவர்களுக்கும் கிடைப்பதாக இறைவன் வாக்களித்துள்ளான்.
இறைவனுடைய பாதையில் ஷஹீதானவர்களை “மரணித்தவர்கள்” என்று நாங்கள் சொல்வதில்லை! அவர்கள் இறைவனின் விருந்தாளிகளாக சுவனத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
ஷஹீதுகளின் உயிர்களை இறைவன் சிறு குருவிகளின் வடிவங்களாக மாற்றி சுவர்க்கலோகத்திற்கு மேலால் பறக்கவிடுவதாக இஸ்லாம் சொல்கிறது.
அந்த ஆன்மாக்களுக்கு சகல விதமான சுகபோகங்களையும் வழங்கி உணவும் அளிப்பதாக இறைவனே சொல்கிறான்.
இஸ்லாத்தை தழுவியதற்காக பெண்ணுறுப்பில் ஈட்டியை பாய்ச்சி கொலை செய்யப்பட்ட சுமையா ( றழி)....
இரண்டு கால்களையும் வெவ்வேறு ஒட்டகங்களில் பிணைத்து இரண்டாக கிழிக்கப்பட்ட அம்மார் ( றழி).....
போன்றவர்கள் எங்களது வழித்தடத்தின் தொடக்கத்தில் விழுந்த வீர விதைகள்....
அது நியூஸிலாந்து வரை இப்போது நீண்டிருக்கிறது!
இன்னும் தொடரவிருக்கிறது......
இங்கே
புத்தளத்தின் பள்ளிவாயலில்,
காத்தான்குடிப்பள்ளிவாயல்களில்,
இருந்து இறைவனை நோக்கி பயணித்த சுவனத்து ஆத்மாக்களை போல
நேற்றும் நாற்பத்தொன்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாக்கள் இறைவனிடம் பறந்து போயிருக்கும்.
சுமையாவோடு, அம்மாரோடு, உமரோடு இறைவனின் விருத்தாளிகளாய் அவர்கள் சுவனப்பரப்புகளில் சுற்றிப்பறந்து கொண்டிருப்பார்கள்.
நியூஸிலாந்து மக்களின் மலர் வளையங்களும், மெழுகுவர்த்திகளும் பேசுகின்ற மெளன மொழிகளின் அதிபெருத்த மொழிபெயர்ப்புகளை எல்லாம் வல்ல இறைவன் அந்த ஆன்மாக்களுக்கு அறிவிக்கட்டும்.
- முஜீப் இப்ராஹீம் -
