கலாநிதி றவூப் ஸெய்ன்
இலங்கையின் சிரேஷ்ட அரசியல் பகுநோக்கரும் (Analyst)விமர்சகரும் தொடக்கநிலை இடதுசாரியும் ராவய பத்திரிகை ஆசிரியருமான விக்டர் ஐவன் இன்று தனது 75 ஆவது வயதில் காலமான செய்தி சற்று கவலையளிக்கிறது. ஐவன் கால் நூற்றாண்டு காலம் ராவய பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார் என்பதற்கப்பால் ஒரு தேர்ந்த அரசியல் பகுநோக்கராகவும் விளங்கினார்.
ஐவன் இந்த விவகாரத்தில் என்ன சொல்கிறார் என்று எல்லா இன மக்களும் அவரது நிலைப்பாட்டை அறிய ஆவலாக காத்திருந்த ஒரு காலம் இருந்தமை அவரது பிரபல்யத்தின் குறியீடாகும். உண்மையில் ஐவன் ஒரு நேர்மையான பத்திரிகையாளர். பற்றுக் கோடு மிக்க இடதுசாரி என்பதைப் போல் ஒரு சிறந்த சமூக செயற்பாட்டாளர். எளிமையானவர் எல்லோருடனும் இயல்பாகப்பழகக்கூடியவர். அவரைச்சுற்றி ஒரு ஆதரவாளர் அலை எப்போதும் இருந்தது.
1971 புரட்சியில், ஜே.வி.பியின் முன்னணிப் போராளியாக இருந்தவர். ஆனால் வெகு விரைவில் சமூக மாற்றத்திற்கான மார்க்கம் வன்முறையல்ல என்பதை உணர்ந்த தருணம் அவர் காந்தி போன்றோரின் சாத்வீக வழிமுறையில் ஜனநாயகப் பாதையில் தனது அடுத்த கட்டப்பயணத்தை ஆரம்பித்தவர்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் மிகுந்த நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டிருந்த ஐவன் தனது தெளிந்த அரசியல் நிலைப்பாட்டைஹஆணித்தரமாக அச்சமின்றி முன்வைத்தார்.அதனால் சில சிங்கள அரசியலாளர்ளின் எதிர்ப்பையும் கூட சம்பாதித்தார்.சிலரது முகஞ்சுழிப்பை எதிர்கொண்டார்.
இலங்கையில் ஐவனைப்போன்ற நேர்மையும் நாணயமும் கொண்டவர்களைக்காணக்கிடைப்பது அரிது. மற்றொன்று ஐவன் முஸ்லிம் சமூகத்தினை நன்கு புரிந்து வைத்திருந்தவர். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐவனை நான் நேரடியாக இருமுறை சந்தித்துள்ளேன்.இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் பற்றி கலந்துரையாடியுள்ளேன்.ஐவனின் ஆங்கிலம் எளியது மிக சரளமானது.
குமார் ரூபசிங்கவினதும் பாக்கியசோதி சரவணமுத்துவினதும் இரண்டு நூல் வெளியிட்டு நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டிருந்தார். Refreshment நேரத்தில் எங்களோடு நாங்களாக அவர் எம்முடன் இருந்து தேனீர் பருகினார்.அப்போது ஜீ.எல்.பீரிஸ் அங்கிருந்து மறைந்து மீண்டும் ஆஜராகினார். அந்தச்சின்ன இடைவெளியில் ஒரு மேட்டிமை அரசியல்வாதியையும் ஓர் எளிய ஆனால் நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட ஒரு அரசியல் பகுநோக்கரையும் பிரித்துப் புரிந்து கொள்ள முடிந்தது.
முப்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள மாஜுவானா கன்கானமிகே விக்டர் ஐவன் இந்த நாட்டின் ஒரு புலமைச் சொத்து என துணிந்து கூறலாம்.அவரை இந்த நாடு இன்று இழந்து நிற்கிறது