சமூக நலன்புரி என்பது ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கட்டமைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு வழங்கப்படும் சமூக சேவை ஆகும். அதாவது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உறையுள், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்றவற்றை பெற்றுக் கொடுத்தல் என்ற நோக்கத்தில் அரசாங்கம், தனியார் மற்றும் சமூக அமைப்புக்களின் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றும் திட்டங்களை இது குறிக்கும். சமூக நலன்புரியானது நிபந்தனைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கே வழங்கப்படுகிறது. இது தேவையுடையோருக்கு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது தொடர்ச்சியானதாகவோ வழங்கப்படுகிறது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள சமூக நலன்புரித் திட்டங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் சமூக சமத்துவத்தை ஏற்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட அரசாங்கத் திட்டமாகும். இத்தகைய திட்டங்கள் குறிப்பாக ஏழை மக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு உதவும் வகையில் கொடுக்கப்படுகிறது.
அந்த வகையில் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலன்புரித் திட்டங்களான சமூர்த்தி திட்டம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம், அஸ்வஸ்வம திட்டம், முதியோருக்கான ஓய்வூதிய திட்டம், ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு போன்றன பற்றி பார்க்கலாம்.
சமூர்த்தி திட்டமானது, சமூக நலன்புரி திட்டங்களில் முதன்மை பெறுகிறது. இது வறுமையை ஒழிக்கும் நோக்குடன் 1994 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வருகிறது. இதன் மூலம் ரன் பிரதீப தங்க நகை அடகு சேவை, அருநலு துரித கடன் வேலைத் திட்டம், புத்தாண்டு சேமிப்பு வேலைத் திட்டம், வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டம், சமூர்த்தி வீடமைப்பு வேலைத் திட்டம், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திட்டம் போன்றனவும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை பெற்றுக் கொள்ளும் இலங்கை பிரஜை ஒருவரின் குடும்ப வருமானம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சொத்துக்கள், வேலை வாய்ப்பு நிலை போன்றன கருத்திற்கொள்ளப்பட்டு இது வழங்கப்படுகிறது.
இலவச கல்வி திட்டமானது 1945 இல் C.W.W. கன்னங்கரா எனும் கல்வியாளரினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆண், பெண் பேதமின்றி இலவச கல்வியை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டதுடன், இலவச பாடநூல், சீருடை, இலவச உணவு என்பனவும் வழங்கப்படுகிறது. மேலும் உயர் தரத்தில் பல்கலைக்கழக வாய்ப்பை பெறும் மாணவர்களுக்கு மஹபொல, பேசரி போன்ற உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மேலதிக கல்வி தேவைகளுக்கு உதவியாக அமைகிறது. இதனைப் பெற்றுக் கொள்பவர் இலங்கை பிரஜையாக இருப்பதுடன், 6 வயதிலிருந்து இந்த இலவச கல்வியை பெற தகுதியுடையவராக காணப்படுகிறார்கள். இவ் இலவச கல்வித் திட்டத்தினால் அனைவருக்கும் சமனான கல்வி கிடைக்கப்பெறுகிறது. இது இலங்கையின் எழுத்தறிவு வீதம் உயர்வதற்கு காரணமாய் அமைந்துள்ளது.
இலவச மருத்துவ சேவை, இந்த சேவை 1934ம் ஆண்டு அப்போதிருந்த பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. இது இன, மத பேதங்களின்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனைப் பெற்றுக் கொள்ள எவ்வித வயதெல்லை கட்டுப்பாடுகளோ அல்லது வேறு நிபந்தனைகளோ இல்லை. இலங்கை பிரஜை ஒருவர் எந்நிலையிலும் உடல், உள நோய்களுக்கான சிகிச்சைகளை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர் ஆவார். இந்த நலன்புரி திட்டத்தினால் இலங்கையில் இறப்பு வீதம் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஸ்வஸ்வம திட்டம், இது 2006 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதார அமைச்சு மற்றும் சமூக நலவாய்ப்புத் துறையின் கீழ் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை வறுமையில் வாழும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இதனைப் பெற்றுக் கொள்வதற்கு வறுமை கோட்டிற்கு உட்பட்ட இலங்கை குடிமகன், கிராம அலுவலகம் அல்லது சமூக சேவை அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும்.
முதியோருக்கான ஓய்வூதிய திட்டம், இந்த திட்டமானது வயதானவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் ஒரு முக்கியமான அரசாங்கத் திட்டமாகும். பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட இலங்கை பிரஜை ஒருவர் இதனைப் பெற்றுக் கொள்ள தகுதி உடையவராக காணப்படுகிறார். இதன் போது அவரது குடும்ப வருமானம் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இலங்கை ஓய்வூதிய திணைக்களம் இதனை நிர்வகித்து வருகிறது.
ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு திட்டம், இலங்கையில் 1992 ஆம் ஆண்டு அரசு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊனமுற்றோருக்கு மாதாந்தம் உதவிகளை வழங்க உருவாக்கப்பட்டது. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுகிறது. இந்த கொடுப்பனவு திட்டம் சமூக நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகிறது. இதனை பெரும் நபரின் வயது, பொருளாதார நிலை என்பன ஆராயப்பட்டு வழங்கப்படும்.
இத்தகைய திட்டங்களின் செயட் பாட்டில் பல சவால்கள் இருப்பினும், இலங்கை அரசு இவ்வாறான சமூக நலன்புரித் திட்டங்கள் மூலம் சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதோடு, தனிநபரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதன் ஊடாக சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும் தூர நோக்க எண்ணத்தோடு இதனை செயற்படுத்தி வருகிறது.
N.பாத்திமா றீமா,
சம்மாந்துறை.
சமூகப் பணி இளங் கலைமானி சிறப்பு பட்டப்படிப்பு,
முதலாம் வருட மாணவி.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்- சீதுவை.