மஜீட். ARM
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் கீழ், பயிலுநர்களுக்கான நீச்சல் பயிற்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (12) சனிக்கிழமை சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 30 பயிலுநர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டதுடன், அவர்களில் மூன்று அரச உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் எம்.டி.எம். றிசாட், எஸ்.என். தில்சாத் பர்வீஸ் மற்றும் எஸ்.ஐ.எம். பிறோஸ் ஆகியோரால் பயிலுநர்களுக்கு நேரடி நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, நீச்சல் தடாகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், நீச்சலின் அடிப்படை நுட்பங்கள், நீரில் பாதுகாப்பாகச் செயற்படும் முறைகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு வளாகத்தின் நிர்வாகி சலாம், அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் தலைவர் என்.டி.எம். ஜெமீன், செயலாளர் ஏ.ஆர்.எம். மஜீட், அமைப்பாளர் எம்.எம். சதாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்சார் அனர்த்தங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின்போது துரிதமாகச் செயற்பட்டு உயிர்களைக் காப்பாற்றக்கூடிய திறமையான மீட்புப் பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் இத்தகைய பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இந்த நீச்சல் பயிற்சிக்காக நீச்சல் தடாகத்தை வழங்கி ஒத்துழைப்பு நல்கி வரும் சம்மாந்துறை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், இப்பயிற்சி நெறியை ஒழுங்குபடுத்தி நடாத்தி வரும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களுக்கும் உயிர்காக்கும் குழுவினர் தமது விசேட நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.






