இலங்கையில் புகழ்பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி இந்த பாரிய மோசடி நடவடிக்கையில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட பணம் மற்றும் கார்
இந்த பாரிய அளவிலான நிதி மோசடியின் ஊடாக, நாட்டின் 21 முன்னணி நிறுவனங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றில் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் இயக்குநராக நடித்து இந்த மோசடியை வழிநடத்தியதாக தெரிவித்து பெஸ்ஸி முகமது என்ற சந்தேக நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரைக் கைது செய்தபோது, அவரிடம் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு பணம் மற்றும், 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொகுசு கார், தங்கப் பொருட்கள் ஆகியவற்றை குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தடவைகளில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
எனினும், அந்த பணத்தை கொண்டு நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தபொருட்களும் சுங்கப்பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
