கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தச் செய்தியைக் கேட்டு தாம் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
“இன்று (11) காலை நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில், கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் நடந்த பேருந்து விபத்து குறித்த செய்தி கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
நாட்டில் தினசரி நடக்கும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அரசாங்கத்தின் தீவிர கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுபோன்ற விபத்துக்களைத் தடுப்பதற்கு நிரந்தரமான திட்டம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இந்த விபத்துக்களை கணிசமாகக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இதற்காக ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்ப உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக அனைத்து தொடர்புடைய வைத்தியசாலைகளையும் தயார் செய்யவும், அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.”