யானைகளைக் கொன்று 25 இலட்சம் விலை மதிக்கத்தக்க அரிய வகை 11 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது.



 பாறுக் ஷிஹான்.


யானைகளைக்கொன்று சுமார் 25 இலட்சம் விலை மதிக்கத்தக்க அரிய வகை 11 கஜமுத்துக்களுடன் கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


கடந்த 29.04.2024ம் திகதியன்று மாலை மட்டக்களப்பு மாவட்டம் காந்தி பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சட்டவிரோத வியாபார நடவடிக்கைக்காக வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலையடுத்து மாறுவேடத்தில் அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு சந்தேக நபரைக்கைது செய்திருந்தனர்.


கைதான சந்தேக நபர் 30 வயது மதிக்கத்தக்க  மயிலவெட்டுவான் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,  சட்டநடவடிக்கைக்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டார்.


மேலும், இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி குணசிறியின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு  மாவட்ட பதில்  உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கிஹான் குணரத்ன  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க தலைமையிலான அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரைக்கைது செய்தனர்.


தற்போது சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section