அக்கரைப்பற்றின் மற்றுமோர் சாதனைப் பெண் சிபானா சஹீட்

Dsa
0

 



ஆண் கற்கின்ற போது அவனே கற்றுக் கொள்கிறான். பெண் கற்கின்ற போது முழு சமூகமே கற்கின்றது. 

(சீன பழமொழி) 


நமக்குள் காத்திரமான சமூக மாற்றம் ஏற்பட நமது பெண் சமூகத்தினர் பல துறைகளிலும் பலமடைய (empower) வேண்டும். அதற்கான ஒரே வழி உயர் கல்வித் துறைகளில் பெண்களின் வருகையும் அயராத ஈடுபாடுமாகும். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருந்து எழுச்சி ஏற்படும் போதே அது சமூகத்தின் நிலைத்திருக்கக் (sustain) கூடியதாக அமையும். 


ஆம், கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று தந்த இன்னுமோர் பெண் ஆளுமை தான் விரிவுரையாளர் சஹீட் சிபானா. இவர் உயர் கல்வித் துறையின் துடிப்பான ஓர்  பெண். மருத்துவ உயிர் இரசாயனவியலில் கால் பதித்துள்ள முது விஞ்ஞான மானி. (MSc in Clinical Biochemistry) நமக்குள் வாழும் ஓர் ஆளுமைப் பெண் ஆவார்.


எப்போதுமே தன்னைக் கல்வித் துறையில் உயர்ந்து சாதிக்க வேண்டும் என துடிப்போடு செயற்படும் ஓர் அற்புத பெண்ணே விரிவுரையாளர் சிபானா எனலாம். இவர் அக்கரைப்பற்று 01 ஐச் சேர்ந்த ஆயுள்வேத வைத்தியர் மர்ஹும் சஹீட்  - சிதினா ஆசிரியைக்கு கனிஷ்ட புதல்வியாகப் பிறந்தார். ஆரம்ப, இடை நிலைக் கல்வியை அக்கரைப்பற்று அஷ்- சிறாஜ் மகா வித்தியாலயத்திலேயே கற்று தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத் துறைக்குத் தெரிவு பெற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முது விஞ்ஞான மானி (MSc) ஐ வெற்றிகரமாக (upper division) முடித்துள்ளார். 


அக்கரைப்பற்று மண் பல நூறு உயர் ஆளுமைகளைத் தந்து சாதித்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. இன்று பேராதனைப் பல்கலைக்கழகத்திலே நுண்ணங்கியியலில் (microbiology) கலாநிதிக் (PhD) கற்கையைத் தொடர்ந்து கொண்டு வருகிறார் விரிவுரையாளர் சிபானா. இந்தத்  துறையில் பலரும் சாதித்திருந்தாலும் இவரைப் போன்ற ஒரு முஸ்லிம்பெண் ஆளுமை சாதித்துள்ளமை நமக்கெல்லாம் பெருமை தரும் விடயமாகும். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசும் இவர் கல்வித் துறையில் Success acadamy என்றொரு யூ ரியூப்பையும் நடாத்தி வரும் ஒரு யூ டியூபருமாகும். நமது பெண்கள் ஒரு பட்டத்தைப் பெற்றாலே போதும் என்று வீட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள், அல்லது சூழ் நிலை அவர்களை முடங்க வைத்து விடுகிறது. இவர் ஐ எல்லாம் தைரியமாக கடந்து தென் கிழக்கு பல்கலைக்கழகப் பட்டத்தோடு நின்று விடாமல் பேராதனை, திறந்த பல்கலைக்கழகம் எனக் கற்று தனது துறைசார் கல்வியில் உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார் விரிவுரையாளர் சபானா அவர்கள்.


சமூகத்தில் உயர் கல்வியைப் பெறும் எல்லாப் பெண்களுக்கும் உரிய பல பொதுவான பிரச்சினைகளான தூர இடங்களுக்குத் தனியாகப் பிரயாணம் செய்தல் சிக்கல்கள், திருமணம் பிந்திப் போவது, நிதிப் பிரச்சினைகள், அக்கம் பக்கத்தார் சமூகத்தின் பல பேச்சுக்கள் என இவரும் எதிர் நோக்கிக் கொண்டே தனது துறையில் சாதித்து வருகின்றார். 


தற்போது பேராதனைப் பல்கலைக்கழக College of medical laboratory technology அலகில் விரிவுரையாளராக கடமையாற்றி வரும் இவர் துடிப்பு மிக்க ஒரு கல்விப் பெண் ஆவார். நுண்ணங்கியியலில் சாதிக்க வேண்டும் என்பதே இவரின் முழு இலக்காகவும் உள்ளது.


தொகுப்பாய்வு: நௌபீர் ஆதம் லெவ்வை


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top