முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றியவாறு இரண்டு சிறிய ரக லொறிகளில் சுமார் பதினைந்து பேர் அளவில் வருகை தந்துள்ளனர் இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை வேளை இவர்கள் வருகை தந்த போது ஒரு லொறியின் சில்லு காற்றுப் போன நிலையில் அவர்கள் இரு வாகனங்களையும் நிறுத்தி விட்டு டயர் மாற்றியுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் டயர் மாற்றிக்கொண்டு இருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த கே டி எச் ரக வாகனம் ஒன்று அதிகாலை மூன்று மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ_9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி குறித்த வாகனம் மற்றைய வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் கே டி எச் ரக வாகனத்தில் வந்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரும் வெல்லம் பிட்டி பகுதியில் இருந்து வந்த வாகனங்களில் டயர் மாற்றிக்கொண்டிருந்தவர்களில் இருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மேலும் எட்டுப்பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் உடலங்களும் மாங்குளம் ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களில் மூவர் மாங்குளம் ஆதார மருத்துவமனையிலும் ஜவர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
-வவுனியா தீபன்-

