நௌபாஸ் ஜலால்தீன்
பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை மாணவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கும் ஆளுமையே கலாநிதி எம்.ஐ.எம்.அமீன் அவர்கள்.
இந்த நாட்டில் இஸ்லாமிய சிந்தனை வேரூன்றுவதற்கு பங்களிப்புச் செய்த ஆளுமைகளில் இவரும் முக்கியமானவர் என்றால் அது மிகையாக மாட்டாது.
அறிஞர் எம்.சீ.சித்திலெப்பை (கி.பி.1832-1898) அவர்கள் பற்றியும் ஓர் நூலை எழுதிய பன்னூலாசிரியர் கலாநிதி எம்.ஐ.எம்.அமீன் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
எதற்காகத் தெரியுமா?
முஸ்லிம் சமூகம், இந்த நாட்டில் தொடர்ந்து வியாபார சமூகமாகவே இருந்து வந்ததை அவதானித்து, இப்படி நம் சமூகம் இருந்தால் நாளை நம் சமூகத்தின் இருப்பு என்ன?
எழுத்தின் சமூகம்,
பேனாவின் சமூகம்,
புத்தகத்தின் சமூகம்,
வாசிப்பின் சமூகம்
எங்கே செல்கிறது. என்பதை ஆழமாகச் சிந்திக்கலானார் 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர் சித்திலெப்பை அவர்கள்.
அறிவுப் பாரம்பரியத்தோடு,பல அறிவியல் நாகரிக,பண்பாட்டு,
முதுசங்களை கட்டியெழுப்பிய நம் சமூகத்தின் இன்றைய நிலையோ திருப்தியான நிலையில் இல்லை.
அரேபியாப் பாலைவனத்தில் அறிவொளி கண்டு, பஸரா,கூபா,டமஸ்கஸ்,பக்தாத் போன்ற நகரங்களில் அதன் பேரொளி பரவி, ஐரோப்பாவின் இதயத்தினுள்ளும்,ஆசிய,
ஆபிரிக்க நாடுகளிலும் அதன் பிரகாசம் சென்றடைந்த வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட சமூகத்தின் இன்றைய நிலை கவலை தருகிறது.
முஸ்லிம் ஸ்பெயினில் ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளிலுள்ள நூல்களையும்,நூல் நிலையங்களையும் வைத்து பெருமைப்பட்டுப் பேசிக் கொண்ட அறிவுப் பரம்பரையில் வந்த, இன்றைய எமது சமூகமா இது ? என வாயில் விரல் வைக்க வைக்கிறது.
சட்டி,பானை பிடிக்கும் கைக்கு,பேனா,கொப்பி எதற்கு? என பெண்கல்வி முடக்கப்பட்ட
அன்றைய சூழலை,
அவதானித்தார் அறிஞர் சித்திலெப்பை அவர்கள்.
மறுபக்கம் ஆங்கிலம் கற்பது ஹறாம் என்ற பத்வா வேறு.
இவற்றையெல்லாம் அவதானித்து,சமூகக் கவலை அவரது உள்ளத்தில் ஆழ்த்த;
தனது வக்கீல் தொழிலையும் விட்டுவிட்டு சமூகத்தின் அறிவெழுச்சியை பளிச்சிடச் செய்யும் உயர் பணியில் களமிறங்கினார்.அதற்குத் துணையாக ஒராபி பாஷாவும் அவருக்கு கைகொடுத்தார்.
எனது சமூகமே ஆங்கிலத்தைப் படியுங்கள்,அப்போதே நவீன சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.
பெண்களே படியுங்கள்,நீங்கள் படித்தால் ஒரு குடும்பம் படிக்கும்.ஏனெனில் தாய்தான் ஒரு பிள்ளையின் முதல் ஆசானும்,வழிகாட்டியும்.
எனவே சட்டிக்குள் இருந்தால்தானே அகப்பையில் வரும்.என்ற தத்துவத்தை அன்றே துணிந்து சொன்னார் அறிஞர் சித்திலெப்பை அவர்கள்.
இதுவே அவரது முதல் முழக்கம்.
இதனால் பலத்த விமர்சனம் அவருக்கு,இது சாதிக்கும் யாரைத்தான் விடவில்லை.
தனக்கு விளங்காத ஒன்றுக்கு முதல் எதிரி அவனேதான் என்பதை நன்கு புரிந்த அறிஞர் சித்திலெப்பை அவர்கள் இந்த சலசலப்புகள் எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல்,தெளிந்த நீரோடைபோல் தனது இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்.
கல்வியின் உயர் இலக்குப் பற்றி அறிஞர் எம்.சீ.சித்திலெப்பை அவர்கள்,
'கல்வி என்பது பாஷைகளை மாத்திரம் வாசித்தறிவதல்ல.
மனவிரிவுக்கும்,தெளிவிற்கும் துணை நிற்பதாகும்.
குர்ஆனிலுள்ள போதனைகளை விளங்கி அவற்றைப் பின்பற்றி நடப்பதே அவசியமானது.
இதனைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டவர்களாவர்.'
என்று கூறினார்கள்.
அறிஞர் எம்.சீ.சித்திலெப்பையின் தியாகத்தின் சுவடுகள்.
# கொழும்பு ஸாஹிராக் கல்லூரி.
#எமக்கான முதல் பத்திரிகையான 'முஸ்லிம் நேசன்',ஞான தீபம்.
# மத்ரஸாக் கல்வி முறை.
# அரபுமொழி,ஆங்கில மொழி கற்கும் நிலை.
# இஸ்லாமிய சமய மறுமலர்ச்சி இயக்கம்.
# அஸன் பேயின் சரித்திரம்.
# கண்டியில் முஸ்லிம் பெண்களுக்கான தனியான பாடசாலை
(சித்திலெப்பை மகா வித்தியாலயம்.)
# முஸ்லிம் கல்விச் சபை.
என அவரது சமூகப் பணி விரிகிறது.
ஆக,இவ்வாறான காத்திரமான பணிகளைச் செய்து கொண்டிருக்கும் கலாநிதி எம்.ஐ.எம்.அமீன் அவர்களின் அறிவுப் பணி இடையறாது தொடர வல்லவன் அல்லாஹ் எப்போதும் பேருதவி புரிவானாக.
