கச்சத்தீவில் இரும்புத் தகடுகளை தேடிச் சென்றபோது பார்த்து, படம் பிடித்ததாக பங்குத் தந்தை வசந்தன் கூறும் புத்தர் சிலை
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சர்ச்சைக்குரிய தீவான கச்சதீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.
எனினும், கச்சத் தீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிக்கின்றார்.
புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை கடற்படை நிராகரித்தாலும், கச்சதீவில் புத்தர் சிலை காணப்படும் வகையிலான புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கும் சிங்கள கடற்படையினரின் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தி புத்தர் சிலைகளை அகற்ற இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என இந்திய பக்தர்கள் மற்றும் இரு நாட்டு பங்குத் தந்தைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


