நோன்பாளிகளுக்கு சுகாதாரமான உணவுகளை வழங்காத உணவங்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அர்சத் காரியப்பர்

Dsa
0

 


நூருல் ஹுதா உமர் 


புனித நோன்புகாலத்தில் அதிகமான மக்கள் தமது இப்தாருக்கு தேவையான உணவுகளையும், சிலர் தமது ஸஹர் நேரத்திற்கு தேவையான உணவுகளையும் கடைகளிலையே வாங்குகிறார்கள். இதனை முன் கொண்டு உண்பதற்கு தரமற்ற உணவுகளை பொதுமக்களின் பாவனைக்கு வழங்குபவர்கள் மீதும், பாவனைக்கு பொருத்தமற்ற, நீண்டநாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்த, பழைய எண்ணெயில் தயாரிக்கப்பட்ட  உணவுகளை மக்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீது திடீர் சோதனைகளை மேற்கொண்டு பாவனைக்கு உகந்ததல்லாத பொருட்களை அழிக்கவுள்ளதுடன், அந்த உணவங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தெரிவித்தார். 


ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரிடம் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளை அடுத்து துப்பரவில்லாத, முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத, பாவனைக்கு உகந்ததல்லாத உணவுகளை விற்போர் மீதும் அந்த உணவகங்கள் மீதும் தயவு தாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். 


சுகாதாரத்தையும் தாண்டி இறைவனுக்கு பயந்து நோன்பாளிகள் சாப்பிடும் உணவுகளை தரமானதாக வழங்கவேண்டியது ஒவ்வொரு உணவகங்களினதும் கடமையாகும். நீண்டநேரம் நோன்புநோற்று நோன்பை துறக்கும் நேரத்தில் தரமில்லாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் பல்வேறு தர்மசங்கடங்களை அந்த நோன்பாளிகள் சந்திக்க நேரிடும். அதிகமதிகம் நன்மைகளை சேகரிக்க வேண்டிய இந்த மாதத்தில் நியாயமான விலைகளில் சுத்தமாகவும், சுகாதாரமுறையிலும் தயாரித்த உணவுகளை மக்களுக்கு வழங்க உணவகங்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top