சவுதி ப்ரோ லீக் தொடரின் நேற்றைய போட்டியில் அல்-நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்-டாவ்வுன் அணியை வீழ்த்தியது.
கிங் சவுத் யூனிவர்சிட்டி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், 17வது நிமிடத்தில் எதிராணியிடம் இருந்து பந்தை பறித்த ரொனால்டோ, சக அணி வீரர் அப்துல் ரஹ்மானுக்கு பாஸ் செய்தார்.
துரிதமாக செயல்பட்ட ரஹ்மான் அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து அல்-டாவ்வுன் அல்வரோ மெட்ரான் 47வது நிமிடத்தில் மிரட்டலாக கோல் அடித்தார்.
இதனால் பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் 78வது நிமிடத்தில், ரொனால்டோ தன்னிடம் வந்த பந்தை அப்துல்லா மடுவிடம் பாஸ் செய்து கோல் அடிக்கும்படி கை காட்டினார். அப்துல்லா மடுவும் சில நொடிகளில் அதை கோல் ஆக மாற்றினார்.
மூன்றாம் நடுவர் ஆப் சைடு என சந்தேகித்து Check செய்தபோது அது கோல் தான் என தெரிந்தது. ஆட்டநேர முடிவில் அல்-நஸர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அல்-டாவ்வுன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் அல்-நஸர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக சுயநலமாக விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டு ரொனால்டோ மீது இருந்தது. அதனை தகர்க்கும் வகையில் அவர் நேற்று விளையாடிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் PSG நட்சத்திர வீரர் மெஸ்சியுடன் ஒப்பிட்டு, ரொனால்டோ தான் பாஸ் செய்வதில் சிறந்தவர் எனக் கூறி பாராட்டி வருகின்றனர்.
