ஏ.பி.எம்.அஸ்ஹர்
நிந்தவூர் மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற கார் விபத்தில் கார் சாரதி பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுபளை பிரதான வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது
இச்சம்பவம் இன்று மதியம் 12 .30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
கல்முனையிலிருந்து திருக்கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மரத்துடன் மோதியதில் காரை ஓட்டிச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிழந்தவர் அக்கரைப்பற்று ஊர்ப்போடியார் வீதியைச்சேர்ந்த ஆறுமுகம் சசீந்திரன் (வயது 52) எனும் குடும்பஸ்தரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.இவர் திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராகக்கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

