அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னின் வடமேற்கு பகுதியில் வீட்டில் ஆரம்பித்த மோதல் காரிலும் தொடர்ந்த நிலையில் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் குறித்த காரிலிருந்து விழுந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயது கர்ப்பிணியை குறிப்பிட்ட வீட்டில் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளார் அந்த நபர். பின்னர் காரிலும் அச்சுறுத்தியுள்ளார் அதன் போது குறிப்பிட்ட பெண் தவறி விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளானார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் அங்கு உயிரிழந்தார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிசேரியன் மூலம் அகற்றப்பட்ட குழந்தை உயிருக்காக போராடுகின்றது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார், குறிப்பிட்ட பெண்ணும் இந்த நபரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பெண்ணுக்கு ஐந்து வயதிற்கு குறைவான இரு பிள்ளைகள் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற வீதியில் காரில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்துள்ளன.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
எங்கள் வாழ்க்கையில் இப்பகுதியில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றதில்லை நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

