சோமாலியாவில் ஹோட்டலொன்றில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதல், மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் 26 பேர் பலியானதுடன் மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர் .
சோமாலியாவின் தென் பகுதியிலுள்ள கிஸ்மயோ நகரின் அசாசே ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இத் தாக்குதல் இடம்பெற்றது.
தற்கொலை குண்டுதாரியொருவன் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை ஹோட்டலுக்குள் செலுத்தி வெடிக்க வைத்ததுடன், சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர் என ஜுப்பாலண்ட் பிராந்திய ஜனாதிபதி அஹமத் மொஹம்மத் இஸ்லாம் மதோபே இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய ஆயுதபாணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஜுப்பாலண்ட் பிராந்திய ஜனாதிபதி அஹமத் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல்களில் பிரபல கனேடிய சோமாலிய ஊடகவியலாளர் ஹோடான் நலேயாஹ்;, அவரின் கணவர் பரீட் ஜமாக் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர் என சோமாலிய ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
6 வயதில் குடும்பத்தினருடன் கனடாவுக்குச் சென்ற ஹோடான் நலேயாஹ் (43) அங்கு ஊடகவியலாளராக பணியாற்றிய நிலையில், அண்மையில் சோமாலியாவுக்குத் திரும்பியிருந்தார். METRO


