மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முதலாவது விமானம் இன்று நண்பகல் 12.20 க்கு கொழும்பிலிருந்து கராச்சி நோக்கி பயணித்ததாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா குறிப்பிட்டார்.
குறித்த விமானம் மாலை 3.10 அளவில் கராச்சியை சென்றடைந்து, அங்கிருந்து மாலை 4.10 அளவில் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்படவுள்ளது.
செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வௌ்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மாத்திரம் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான முறுகல் நிலை வலுப்பெற்றதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது வான்பரப்பை மூடியது.
இதன் காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் பாகிஸ்தானுக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

