முஸ்லிம் பெண்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு இடையூறாக அல்லது அவர்களைத் தொந்தரவுக்கு உட்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முஸ்லிம் பெண்கள் பொது இடங்களிலும், கட்டடங்களின் உட்பகுதிக்கும் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்து முஸ்லிம் பெண்களிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி என்.டி. உடகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடை விதிக்கப்பட்டாத ஹிஜாப் மற்றும் அபாயா அணிந்து செல்கின்ற பெண்கள் கூட தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவதாகவும்,அவர்களின் ஹிஜாப் மற்றும் அபாயாக்களை அகற்றிக் கொள்ளுமாறு சில இடங்களில் வற்புறுத்தல் விடுக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதன் தலைவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அவசரகால விதிகளுக்கும்,பொதுவான சட்டங்களுக்கும் முரணின்றி பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கான சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் கலாநிதி என்.டி. உடகம குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பொது இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை ஏற்படுத்தும் செயலானது,அரசியலமைப்பின் 12 ஆம் மற்றும்14 ஆம் சட்டங்களின் சரத்துகளை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுதல் மற்றும் சமத்துவம் ஆகிய உரிமைகளை மீறுவதாக அமைந்துவிடும் என்றும் ஆணைக்குழு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
தனிப்பட்ட அடையாளத்தை உறுதிசெய்ய முடியாதவாறு முகத்தை முழுமையாக மறைக்கும் விதமாக ஆடைகளை அணிந்து செல்வதற்கு அவசரகால சட்டத்தின்32 ஏ பிரிவின் கீழ் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையின் கீழ்,அவிசாவளை, புவக்பிட்டிய பகுதியில் கடந்த 7 ஆம் திகதி,ஹிஜாப் அணிந்து சென்றிருருந்த பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆசிரியைகளை பாடசாலைக்குள் செல்வதற்கு பெற்றோர்கள் சிலர் இடையூறு விளைவித்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து மேல் மாகாண ஆளுநரின் தலையீட்டினால் அந்த ஆசிரியைகள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

