×
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுக்களால் நடத்தப்பட்ட பயங்கர குண்டுத் தாக்குதலில் எம்.எல்.ஏ ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவரும் அவருடன் கூட இருந்த மேலும் நால்வருமே இதில் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளையதினம் சட்டீஸ்கர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் தண்டேவாடா தொகுதி பா.ஜ எம்.எல்.ஏ பீமா மாண்டவி நேற்றைய தினம் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதன்படி பாஸ்தார் பகுதியில் உள்ள பசேலியில் இருந்து குவகோன்டாவை நோக்கி அவரது பிரசார வாகனம் சென்றுகொண்டிருந்ததாகவும் சியாமகிரி மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு தரையில் புதைக்கப்பட்டு இருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலால் பீமா சென்ற வாகனம் வெடித்துச் சிதறியதுடன் அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள் வெளிப்பட்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ பீமா மாண்டவி மற்றும் அவரது பாதுகாவலர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, காஷ்மீரிலும் நேற்றையதினம் தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியும், அவருடைய பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்லதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜிந்தர் எனும் அந்த நிர்வாகி தனது பாதுகாவலருடன் சென்றுகொண்டிருந்தபோது தீவிரவாதிகள் திடீரென வழிமறித்து அவர்களை சுட்டுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்து ஜம்மு நகர வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டபோதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

