(க.கிஷாந்தன்)
இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 98 தனிவீடுகள் அடங்கிய “பகத் சிங் புரம்” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் 24.03.2019 அன்று இடம்பெற்றது.
அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ், அமைச்சின் செயலாளர், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 98 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 15 மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் குடிநீர் வசதிகளும் இவ்வீடமைப்பு திட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன'.





