பெண்கள் 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லவும், பிரார்த்தனைகளில் ஈடுபடவும் தலிபான்களால் தடை விதிப்பு.

Dsa
0

 


ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக உலகளவில் விவாதம் எழுந்திருக்கின்றது. அவ்வகையில் தற்போது பெண்களுக்கு புதிய கட்டுப்பாட்டை தாலிபான்கள் விதித்துள்ளனர். 


பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்யவும், பிற பெண்களின் முன்னால் குர்ஆன் ஓதக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்திருக்கின்றனர்.


ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி அஷ்ரப் பணியை அகற்றிவிட்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி கிட்டத்தட்ட 03 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போது வரை பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றது.


2021 ஆகஸ்ட் 15 இல் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். இந்த 03 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது. குறிப்பாக மக்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இல்லாமல் அடிமை போன்று நடத்தப்படுவதாக முறைப்பாடு எழுந்திருக்கின்றது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருட்டில் ஈடுபட்டதாக கூறி 03 ஆப்கானியர்களின் கைகள் துண்டிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி, பொருளாதாரமும் சீரழிந்துள்ளதால் மக்கள் உணவுக்கு பிறரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 04 கோடி மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வெறும் ரொட்டியையும் டீயையும் (Rotti & Tea) மட்டுமே உண்டு வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.


மேலும், வேலை வாய்ப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படும் நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியத்திற்கும் கீழ் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கெதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் வேலைக்கு செல்வதில் தாலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். அது மட்டுமன்றி படிப்பதற்கும், ஏன் அழகு நிலையங்களை நடத்துவதற்கும் கூட தாலிபான்கள் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர்.


பல வெளிநாடுகளில் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முற்றிலும் குறைந்து போயுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண்கள் வெளியில் நடமாடுவதற்கு கூட தாலிபான்கள் கட்டுப்பாடுகள் விதித்ததோடு ஆண் நண்பர்களுடன் பொதுவெளிகளில் நிற்கக் கூடாது என்று கூறியிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது அடுத்த அதிரடி நடவடிக்கையாகவே பெண்களுக்கு மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர் தாலிபான்கள்.


அதாவது, பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பிரார்த்தனைகள் செய்வது, அல்-குர்ஆன் வசனங்களை ஓதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு வளர்ந்த பெண் மற்றொரு பெண்ணின் முன்னால் பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கோஷம் எழுப்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் அதிகமாக பயன்படுத்தும் 'சுபஹானல்லாஹ்' போன்ற வார்த்தைகளையும் சொல்லக்கூடாது.


பெண்கள் யாரும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கக் கூடாது, இதனால் பாடல் பாடவும் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை தாலிபான்களின் நல்லொழுக்கத் துறை அமைச்சரான காலித் ஹனாஃபியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், பின்னர் இப்பதிவு நீக்கப்பட்டது. ஏற்கனவே, பெண்கள் கல்வி பயிலவும் வேலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பிரார்த்தனை செய்வதற்குகூட தாலிபான்கள் கட்டுப்பாடுதளை விதித்திருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top