இலங்கை ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் இறக்காமம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் நாசிப் அம்ர் விசேட சித்தி.

 




ஸெய்ன்ஸித்தீக் 

2022 ஆம் ஆண்டில் தேசிய ரீதியில் இடம்பெற்ற இலங்கை ஒலிம்பியாட் கணிதப் போட்டியில் இறக்காமம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் தரம் 9 ல் கல்வி பயிலும் மாணவர் முஹம்மத் பெரோஸ் நாசிப் அமர் பங்கு பற்றி விசேட சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை பெற்றுக் கொடுத்துள்ளார்.


இலங்கை ஒலிம்பியாட் கணித  மன்றம் 

Sri Lanka Olympiad Mathematics Foundation (SLOMF) 

என்பது பாடசாலை மட்டத்தில் கணிதத்தை பிரபலப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு  அமைப்பாகும். இது இலங்கை கணித ஒலிம்பியாட் (SLMO) போட்டியினை ஆண்டுதோறும் நடத்துகிறது மற்றும் சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO), ஆசிய பசிபிக் கணித ஒலிம்பியாட் (APMO) மற்றும் சர்வதேச கணிதப் போட்டி (IMC) போன்ற சர்வதேச போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த அணிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது.


தனிப்பட்ட பரீட்சார்தியாக தோற்றிய குறித்த மாணவர் இதற்கு முன்னரும் தரம் 6 ல் கல்வி பயின்றபோது தரம் 8 மாணவர்களுக்கான குறித்த போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றி உயர் சித்தியினை (High Distinction ) பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.


அது மாத்திரமன்றி குறித்த மாணவர் பாடசாலை கல்விக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிப்பதுடன் பகுதி நேர வகுப்புகளுக்கு செல்லாது சுய கற்றலில் அதிக ஆர்வமுடன் ஈடுபடுவதன் காரணமாக  தனது வகுப்பிலும் முதன்மையானவராக திகழ்கின்றார்.


மேலும் இவ்வருடம் இம்மாணவரின் சுய முயற்சியினால் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்ட "The Future Student" எனும் ஆங்கில நாடகம் கோட்டம், வலயம், மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றதுடன் இறக்காமம் மத்திய கல்லூரியின் பெயரை வரலாற்றில் முதன் முதலில் கடந்தவாரம் இடம்பெற்ற ஆங்கில தின மாகாண மட்ட போட்டியில்  ஒலிக்கச் செய்திருந்தார்.


கல்வி அமைச்சினாலும் தேசிய நூலகத்தினாலும் முன்னெடுக்கப்பட்ட ஆயிரம் புத்தகங்களை உருவாக்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் இம்மாணவரால் எழுதப்பட்ட "கொரோனா கால சிறுகதைகள்" எனும் நூல் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார்.


கல்வியில் ஆர்வமும் சிறுவயதில் சமூக அக்கறையும் நற்பண்புகளையும் கொண்டுள்ள இம்மாணவர் சட்டத்தரணி பீ. எம் எம் பெரோஸ் நழீமி மற்றும் வைத்தியர் நஸ்ரின் பானு அவர்களின் சிரேஷ்ட புதல்வரும் ஆவார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section