மக்கள் எதிர்ப்பை சந்திக்கப்போகும் கிழக்கு ஆளுநர் - இம்ரான் எம்.பி எச்சரிக்கை!

0

 



அபு அலா -


திருகோணமலை மாவட்ட மீன்பிடி தடை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் எடுத்த ஒரு தலைபட்சமான முடிவு அம்மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது குறித்து ஆளுநர் உடன் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். 


கடந்த சில தினங்களாக திருகோணமலை மாவட்ட மீனவ குழுக்களுக்கிடையில் நிலவும் முருகல்நிலை தொடர்பாகவும், அது குறித்து ஆளுநர் எடுத்த தீர்மானம் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஊடகங்களுக்கு இன்று

கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, 


சுருக்குவலையைப் பொறுத்தவரை  அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை, அனுமதிக்கப்படாத சுருக்கு வலை என இரண்டு வகையான வலைகள் உள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் உள்ளது. 


இதில் சட்டரீதியாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலை மூலம் கிண்ணியா, மூதூர், திருகோணமலை, நிலாவெளி, இறக்கக்கண்டி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை, வெருகல் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 5000 க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச்  செல்கின்றனர்.


எனினும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட சுருக்கு வலைக்கும் அனுமதிப்பத்திரம் வழங்க முடியாத சுருக்கு வலைக்கும் வித்தியாசம் அறியாத ஆளுநர், தற்போது சுருக்கு வலை என்பது சட்டவிரோதமான ஒன்று என்ற நோக்கில் ஒரு தலைபட்ச முடிவை எடுத்து திருகோணமலை மாவட்ட சிறுபான்மை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை இல்லாமலாக்கும் முயற்சியை செய்துள்ளார்.


அங்கு இரண்டு மீனவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவே அந்த முருகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இரண்டு குழுக்களையும் அழைத்து இருபக்க நியாயங்களையும் கேட்ட பின்பே தீர்மானத்திற்கு வர வேண்டும்.


ஆனால்  கிழக்கு மாகாண ஆளுநர் இதில் ஒரு குழுவினரின் கருத்தைக் கேட்டே இந்த மீன்பிடித்தடை தீர்மானத்திற்கு வந்துள்ளார். இது குறித்து அவரை நேரில் சந்தித்து விடயத்தை தெளிவு படுத்த கடந்த வியாழக்கிழமை பல தடவை முயற்சித்தபோதும் அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. 


திருகோணமலை மாவட்டத்தைப் பொருத்தவரை மீன் நுகர்வில் 50 சத வீதத்துக்கு அதிகமானவை சுருக்கு வலை மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.  சாதாரண மீனவக் குடும்பங்கள் இந்தத் தொழிலேயே தங்கியுள்ளனர்.


எனவே இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு  கிழக்கு மாகான ஆளுநர் இரண்டு தரப்பு நியாயங்களையும் கேட்டறிந்து பூரண தகவல்களைப் பெற்ற பின்னர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சுட்டிக்காட்டினார்.


ஆளுநரின் இந்த நடவடிக்கை அம்மீனவக் குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து கிழக்கு ஆளுநர் மீள் பரிசீலனை செய்து உடன் நியாயமான தீர்மானத்திற்கு வர வேண்டும். இன்றேல் எதிர்காலத்தில் பாரிய மக்கள் எதிர்ப்பு ஒன்றை சந்திக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top