ருத்ரன்' படத்துக்கு திடீர் தடை: அதிர்ச்சியில் ரசிகர்கள்.!




ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ருத்ரன்' படத்தின் ரிலீசுக்கு நீதிமன்றம் திடீர் தடை போட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ருத்ரன்'. அண்மையில் இந்தப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்தது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருந்த 'ருத்ரன்' பட ரிலீசுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.



தமிழ் சினிமாவில் டான்ஸ்
மாஸ்டராக கலக்கிய லாரன்ஸ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் முனி சீரிஸ்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார். த்ரில்லர் காமெடி ஜானரில் வெளியாகும் இவரின் முனிஸ் சீரிஸ்களான காஞ்சனா படங்கள் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும்.


இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள படம் 'ருத்ரன்'. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக களமிறங்கியுள்ள படம் 'ருத்ரன்'. ராகவா லாரன்ஸ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள இந்தப்படத்தில் சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்தப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில் வரும் 14 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடந்தது. இந்நிலையில் 'ருத்ரன்' படத்தின் இந்தி மற்றும் பிற மொழி டப்பிங் உரிமையை ரெவன்சா குளோபல் வென்சர்ஸ் எனும் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்த போடப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ரெவன்சா நிறுவனம் 10 கோடி ரூபாய் செலுத்தியதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் கூடுதலாக 4 கோடியே 50 கேட்டு 'ருத்ரன்' பட தயாரிப்பு தரப்பு ரெவன்ஸா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக ரெவன்ஸா நிறுவனம் திட்டமிட்டபடி 'ருத்ரன்' படம் வெளியானால் தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 'ருத்ரன்' படத்தை ஏப்ரல் 24 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்துள்ளது.


இதனால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். அண்மையில் வெளியான 'ருத்ரன்' பட டிரெய்லர் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. பக்கா கமர்ஷியல் படமாக 'ருத்ரன்' படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராகவா லாரன்ஸ் தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section